வன்னியர்களுக்கும்கவரை வகுப்பினருக்கும் ஏற்பட்ட வழக்கு?

மற்றுமொறு வழக்கின் விவரத்தை கீழே தருகிறோம்;-

1860-ல் ஆண்டில் செங்கற்பட்டில் வசித்த வந்த வன்னிய மரபில் உதித்த நயினியப்ப நாயகர் என்பவரின் குமாரருக்கு, திருமணம் நடைபெற்றது. அவ்வமயம் அத்திருமண ஊர்வலம் பல வீதிகளைச் சுற்றி வந்தது. அவ்வூர்வலத்தில் வன்னியர் தம் விருதுக் கொடிகளுடன் பட்டு, பன்னாங்கு கட்டிய பல்லக்குடன் கோணக் கொம்பு பிருதை ஊதிக் கொண்டு கவரை ஜாதியினர் வசிக்கும் வீதியில் வரும் போது தகராறு ஏற்பட்டது. தகராறுக்குள்ள காரணம் என்னவென்றால்?

பள்ளிப் புத்திரர்களோ? அவர்கள் எங்கள் வீதியில் வரவேக் கூடாது!

பள்ளி புத்திரர்களாகி வன்னியர்கள் தனித்தோ, ஊர்வலமாகவோ கவரை வகுப்பினர் வசிக்கும் வீதிகளில் வருவதால் க்ஷ கவரைக்கு கவுரவக் குறைபு ஏற்படுகிறதென்பது கவரைகளுடைய வாதம். இதை வன்னியர்கள் ஏற்கவில்லை. பலமாக  ஆட்சேபித்து ஊர்வலத்தை மேலும் நடத்திச் சென்றனர். இதன் மீது இருசாராரும் கைகலப்பு ஏற்படவே, அச்சண்டையில் பல பேருக்கு பலமான காயங்கள் ஏற்பட்டுவிட்டன.

கவரை வகுப்பினர் அதை காரணமாக வைத்துக் கொண்டு செங்கற்பட்டில் மாஜிஸ்ட்ரேட் பவர் பெற்ற பேஷ்கார் கச்சேரியில் வழக்கு தொடர்ந்தனர். வன்னியர்களில் முதன்மையாக இருந்தவர்களான மாங்காடு சோலை முனியப்ப நாயகரும் மற்றும் பல வன்னியரும் சேர்ந்து கொங்கி நாராயண செட்டியையும் மற்றும் அவரைச் சார்ந்த கன்னிச் செட்டி, பச்சையப்ப செட்டி பலரையும் ஜோட்டினால் அடித்துவிட்டார்கள் என்பது கவரை வகுப்பினருடைய வாதம். இதன் காரணமாக பல சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடிவில் முனியப்ப நாயகர் வகையராவுக்கு ரூ. 45 அபராதம் விதிக்கப்பட்டன.

கீழ் கோர்ட்டில் வன்னியருக்குத் தோல்வி மேல் கோர்ட்டில் வன்னியருக்கு வெற்றி!

வன்னியர்கள் இதை ஆட்சேபித்து மேல் கோர்ட்டிற்கு அப்பீல் செய்தார்கள். அவ்வமயம் செங்கற்பட்டு செஷன் கோர்ட்டில் கனம். புல்ட்டன் துரை அவர்கள், நீதிபதியாக இருந்து வழக்கை தீர விசாரித்து கீழ்கண்ட தீர்ப்பை அளித்தார். அதாவது :-

செருப்படி சம்பந்தப்பட்ட விஷயத்தில் போதிய சாட்சியம் இல்லாததால்  முனியப்ப நாயகர் வகையரா மீது கீழ் கோர்ட்டு விதித்த அபராதத்தை ரத்து செய்கிறேன். மேலும் ஒவ்வொரு கிராமம், நகரம், பட்டணங்களில் உள்ள வீதிகள் எல்லாம் இராஜாங்கத்திற்கு சொந்தமென்றும் இதில் யாரும் எந்தவிட கொடியுடனும் ஊர்வலமாக செல்லலாம் என்றும், இதை எவரும் ஆட்சேபிக்கக் கூடாது என்றும் கூறி, சம்பந்தப்பட்டவர்களை மேலும் எச்சரித்தார். நிற்க, இவ்வழக்கில் வன்னியர்களுக்கு ஏற்பட்ட கோர்ட்டு செலவையும் கவரை வகுப்பினர் கட்டிக் கொடுக்க வேண்டுமென்றும் தனது தீர்ப்பில் கூறினார்.

இதை கவரை வகுப்பினர்கள் ஆட்சேபித்து, சென்னையிலுள்ள சதர் அதாலத்து கோர்ட்டிற்கு அப்பீல் செய்தனர். பிரபல வக்கீலான பாரிஸ்டர் மெயின் துரை அவர்களை வைத்து வாதித்தனர். சென்னை கோர்ட்டிலும் வன்னியர் பக்கமாகவே வெற்றி ஏற்பட்டது.

செங்கற்பட்டு வழக்கின் மூலமாக நாம் என்ன அறிகிறோம்?

இந்த நிகழ்ச்சியில் இருந்து நாம் என்ன புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வன்னியர்களாகிய நம்மை வேறு எந்த வகுப்பினரும் வன்னியர் என்று மதித்ததே கிடையாது. பள்ளி என்றே அழைத்து வந்திருக்கின்றனர். மேலும் இப்பள்ளி வகுப்பினாராகிய நம்மை ஒரு சிலர் தாங்கள் வசிக்கும் வீதிகளில் நுழைய விட்டதே இல்லை. காரணம் அந்தக் காலத்தில் ஒரு சில வகுப்பினருக்கு நம்மை பற்றி தவறான எண்ணம் ஏற்பட்டிருந்தது. வன்னியர் அல்லது பள்ளிகள் கீழ் ஜாதியினர் என்றே அவர்கள் அகம்பாவத்துடன் எண்ணிக் கொண்டு இருந்தனர். இதை தெள்ளென எடுத்துக் காட்டும் செய்தி தான் மேலே கண்ட செங்கற்பட்டு வழக்காகும்.

இவ்வழக்கின் மூலமாக ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாகவும் ஆத்திரத்தின் காரணமாகவும் சென்னை, செங்கற்பட்டு, வட ஆற்காடு ஜில்லாக்களில்  வன்னியர்களிடையே ஓர் புரட்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படலாயிற்று. எங்கும் பல கூட்டங்கள் நடைபெறலாயின. சங்கங்கள் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடையேயும் உதிக்கலாயின. வன்னியராகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒருவர்கொருவர் கூட்டுறவும், பாசமும் கொள்ளலாயினர். வன்னியரை இழித்து, பழித்து நிகழ்ச்சிகள் நடந்தால் அவைகளை எதிர்த்து நின்று போராட முற்பட்டனர். இது போன்ற நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அது தங்களுக்கு ஏற்பட்டதாகவே மற்ற பிரதேச வன்னியர்கள் எண்ணலாயினர்.

நாங்கள்வன்னியர்கள்’  பள்ளிஎன்ற பெயர் தேவையில்லை!

பள்ளிகள் நுழையக்கூடாது என்று பிறர் தடுத்து வந்த பொது இடங்களில் எல்லாம் வன்னிய குலாபிமாணிகள் மீறி நுழைய முற்பட்டனர். இதனால் வந்த அனேக கஷ்ட நஷ்டங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தங்கள் மீது உள்ள இழிவை ஒழிக்க, அனைவரும் வீரவேசத்துடன் ஓரணியாக நின்று எல்லாவிடத்திலும் போராடினர். வெற்றி பல கண்டனர். நிற்க, இது நேரத்தில் பள்ளி என்று நம்மை யார் அழைத்தாலும் அவர்கள் மீது நம்மவர்கள் பாயலாயினர். மேலும் பள்ளி என்ற பெயரை மாற்றி வன்னியர் என்ற பட்டத்தை அரசாங்கத்தில் பதிய வைக்க இச்சமயத்தில் முயற்சியும் எடுத்துக் கொண்டனர். இதனால் உறங்கிக் கிடந்த வன்னியரிடையே (2வதாக) இடைக்காலத்தில் ஓர் புத்துணர்ச்சி ஏற்படலாயிற்று.

  • ••• •

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu