வன்னியருக்கும், அன்னியருக்கும் தகராறு!
மகா சங்கத்தின் வேலைகளும், ஜில்லா சங்கங்களின் வேலைகளும் மளமளவென்று வளர்ந்து மிக வேகமாகவும், சிறப்புடனும் நடந்து வரும் போது பல அசம்பாவிதங்களும் கோர்ட்டு வழக்குகளும் நடக்கத் தொடங்கி விட்டன. நம்முடைய முன்னேற்றத்தை விரும்பாத பலர், நம் தலைவர்கள் மீதும் அவர்கள் எழுதி வெளியிட்ட புத்தகங்கள் மீதும் வீண் வழக்குகள் தொடுக்கலாயினர். உதாரணமாக:-
1912ம் ஆண்டில் சேலம் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஓர் வழக்கு நடைபெற்றது.
சு. அர்த்தநாரீச வர்மா மீது வழக்கு
(கேஸ்நெ.சி.சி 184/1912) இவ்வழக்கில் சேந்தமங்கலம் வெங்கட்ராம ஆசாரி வாதியாவார். பிரதிவாதி சு. அர்த்த நாரீச வர்மா அவர்களாகும். வழக்கிற்கு காரணம் யாதெனில்:- ச. அர்த்த நாரீச வர்மா அவர்களை அப்போது எழுதி வெளியிட்ட ’வன்னிய வம்ச பிரகாசிகை’ எனும் புத்தகத்தில் ஆசாரிமார்களை அவதூறாக தாக்கி எழுதினார் என்பதே.
இக்கேஸ் பல மாதங்கள் சேலத்தில் நடைபெற்று முடிவில் தள்ளப்பட்டு விட்டன. ஆயினும் வாதி விடவில்லை. 1913ல் இவ்வழக்கை மேல் கோர்ட்டிற்கு கொண்டு சென்றார். (ரிவிஷன் நெ.ஆர்.பி. 14/1913) க்ஷ வழக்கை விசாரணை செய்த ஜட்ஜ் அவர்களும் வர்மா அவர்கள் எழுதிய புத்தகத்தில் அவதூறு ஒன்றும் கிடையாது என்று கூறி, கீழ் கோர்ட்டு தீர்ப்பை ஆதரித்து வழக்கை தள்ளிவிட்டார். ஆக இந்த இரு கோர்ட்டிலும் சு. அர்த்தநாரீச வர்மா அவர்களுக்கே வெற்றி ஏற்பட்டது.
ஆ. சுப்பிரமணிய நாயகர் மீதும் வழக்கு
மேலே கண்டுள்ள வழக்கைப் போன்றே 1919லும் சென்னையில் ஓர் வழக்கு நடைபெற்றது. வன்னிகுல மித்திரன் பத்திராதிபர் திரு ஆ. சுப்பிரமணிய நாயகர், தம் பத்திரிகையில் எழுதியதை ஆட்சேபித்து பொன்னுசாமி முதலியார் என்பவர் சென்னை பிரதம மாகாண மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். (கேஸ் நெ.சி.சி. 13196/1919) இவ்வழக்கும் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இரு சாராரும் போட்டி போட்டுக் கொண்டு வழக்காடினர். முடிவில் கேஸ் தள்ளப்பட்டது. நம் குலப் பெரியார் ஆ. சுப்பிரமணிய நாயர், இவ்வழக்கில் அமோக வெற்றி பெற்றார்.
- ••• •