சென்னை இராயபுரத்தில் நடந்த கலவரம்!
வன்னியர் மானம் கோர்ட்டேறியது!

1924வது ஆண்டிலும் சென்னையில் ஓர் வழக்கு நடைபெற்றுள்ளது. ஆனால் இவ்வழக்கை நடைபெற்ற போது சென்னையிலுள்ள வன்னியர்களையும் மற்ற ஜில்லாக்களிலுள்ள நம் சமூகத்தவரையும் ஓர் தாக்கு தாக்கி விட்டது. காரணம்? இவ்வழக்கில் வன்னியருடைய மானம், கப்பலேறும் நிலையில் இருந்தபடியால் அனேக வன்னிய கனவான்கள் இவ்வழக்கில் தீவிர சம்மந்தம் கொண்டு உதவலாயினர். இவ்விசித்திர வழக்கின் விவரத்தை கீழே விவரிக்கிறோம். அதாவது:-

1924ல் ‘நாடார் குல மித்திரன்’ என்று ஒரு பத்திரிகை நடைபெற்று வந்தது. அப்பத்திரிகைக்கு ஆசிரியர், உரிமையாளர் முறையே சங்கரலிங்க நாடார், முத்து நாடார் என்பவர்களாகும். அவர்களது பத்திரிகையில் வன்னியர்களைப் பற்றி ஓர் கட்டுரை வெளி வந்தது. அக்கட்டுரை வன்னிய ஜாதியையும், குறிப்பாக வன்னியப் பெண்களையும் இழிவு படுத்தி எழுதப்பட்டிருந்தது. அதாவது:- ஓர் வன்னியப் பெண்ணிற்கு பல பேர் புருஷர்கள் இருப்பார்கள் என்றும் இப்புருஷர்கள் அனைவரும் இதை மனம் ஒப்பி ஏற்று அதன்படி அப்பெண்ணை அவர்கள் ஒவ்வொருவரும் மனைவியாக அனுபவிப்பார்கள் என்றும் இது அவர்களுடைய ஜாதிய வழக்கம் என்றும், இன்னும் என்னென்னமோ (எழுத தகாதவைகள்) கேவலமாக அக்கட்டுரையில் எழுதி இருந்தார்கள்.

வன்னியருக்கும், நாடாருக்கும் மோதல்

இதை வன்னியர்கள் பலமாக ஆட்சேபித்து வாபஸ் வாங்க வேண்டுமென்று பலத்த கிளர்ச்சி செய்தனர். இதை அப்பத்திரிகை நிர்வாகிகள் ஏற்கவில்லை. உங்கள் ஜாதியில் இன்றும் நடப்பதை தான் எழுதினோம் என்று கிண்டல் செய்யவும் முற்பட்டனர். (இதை பெருவாரியான நாடார்கள் ஏற்கவில்லை. இப்படி எழுதினவர்களை கண்டிக்கவும் செய்தனர்.) இதன் மீது வன்னியர்களுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

சென்னை கோர்ட்டில் விசித்திர வழக்கு

வடசென்னையைச் சார்ந்த திரு. ஆ. முனிசாமி நாயகர் என்பவரும் மற்றும் 5 பெரியவர்களும் ஒன்று சேர்ந்து ’நாடார் குல மித்திரன்’ பத்திரிகை நிர்வாகிகளான இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டில் நடந்தது. (கேஸ் நெ. 36888/1924) பிரதி வாதிகளான க்ஷ நாடார் இருவரும் தாம் எழுதியதை நிரூபிக்க இராயபுரத்திலும், வண்ணாரபேட்டை துவரை களத்தில் வேலை செய்யும் சில வன்னிய ஆண், பெண்களை சாட்சிகளாக கொண்டு வந்து சாட்சியம் கூற வைத்தனர். சாட்சியம் கூற வந்த அப்பாவிகளான அவ்வன்னிய ஆண், பெண்கள் பத்திரிகையில் வெளி வந்துள்ளது உண்மை என்றும் அதன்படி தான் நாங்கள் நடந்துக் கொள்ளுவது என்றும் வெட்கமில்லாமல் சாட்சியம் கூறினர்.

அப்பாவி வன்னியர்களின் விபரீத சாட்சியம்

பாவம் அவர்கள் என் செய்வார்கள்? தங்கள் எஜமானர்கள் சொல்லியபடி சொல்லலாயினர். ஆனால் இதை நம் குல மக்கள் ஏற்கவே இல்லை. பலமாக எதிர்த்து எதிர் வாதம் செய்தனர். தங்களுடைய முன்னோர்கள் நல்ல நிலைமையில் இருந்துள்ளார்கள் என்றும், இதற்கு சாட்சியங்கள் இருக்கிறதென்றும், இப்போது கூட (1924ல்) வன்னியர்கள் சென்னை அரசாங்கத்தில் சில உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்றும் மற்றும் பல பேர் செல்வச் சீமான்களாக சென்னையிலும், வெளியூரிலும் வாழ்கின்றனர் என்றும் எதிரிகள் எங்கள் ஜாதியை இழிவு படுத்த வேண்டுமென்ற கெட்ட நோக்கம் கொண்டே பத்திரிகையில் இப்படி எழுதி, அதற்கு சாட்சியாக எங்கள் வகுப்பைச் சார்ந்த சில அப்பாவிகளையே கொண்டு வந்து பொய் சாட்சியம் கூற வைத்திருக்கிறார்கள் என்றும் இதை கோர்ட்டார் ஏற்க கூடாது என்றும், பலமாக வழக்காடினர். அரசாங்கத்திற்கும் கடிதம் மேல் கடிதம் எழுதினர்.

இச்சமயத்தில் வடசென்னையில் வன்னியர் சார்பாக பாக்சர் சோடாகார துரைசாமி நாயகர் வகையராவுக்கும், நாடார்களுக்கும் பல அசம்பாவிதமான மோதல்கள் ஏற்படக் கூடுமென்று அரசாங்கம் அஞ்சி இராயபுரத்திலும், வண்ணாரப்பேட்டையிலும் பலமான போலீஸ் காவல் போடப்பட்டது.

நெஞ்சு திருக்கிடும் இந்த விசித்திர கேசும், சென்னையில் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இக்கேஸ் நடைபெறும் ஒவ்வொரு தினத்தன்றும் சென்னையில் உள்ள வன்னியர்கள் ஆயிரக்கணக்கில் கோர்ட்டைச் சுற்றி குழுமி இருப்பர். எதிரிகள் கோர்ட்டிலிருந்து வெளியில் போவதாக இருந்தாலும் அல்லது கோர்ட்டிற்கு வர வேண்டியதாக இருந்தாலும் பலத்த போலீஸ் காவலுடன் தான் வர, போக நேர்ந்ததென்றால் அப்போது நம் வகுப்பினர் கொண்டிருந்த கோபமும், ரோஷமும், ஆத்திரமும் எவ்வகையில் இருந்திருக்கும் என்பதை வாசகர்கள் ஊகித்துக் கொள்ளலாம்

இரு சாராருடைய வாதத்தையும் கேட்ட பிறகு கோர்ட்டார் கீழ்கண்ட தீர்ப்பை அளித்தனர், அதாவது.

எதிரிகளுக்கு ரூ. 201 அபராதம்

பிரதிவாதிகள் கூறிய சமாதானத்தை கோர்ட்டார் ஏற்பதிற்கில்லை என்றும், பிரதிவாதிகளின் சாட்சியம் எப்படி இருந்தாலும் அதைக் கொண்டே ஒரு வகுப்பினர் இப்படித்தான் நடந்துக் கொள்ளுவார்கள் என்று கருத முடியாதென்றும் வன்னிய ஜாதியில் ஒருவர் தவறாக நடந்திருந்தாலும் அதைக் கொண்டே அந்த ஜாதியின் பூரா மக்களின் நடத்தையும் அப்படியே இருக்குமென்று சொல்லுவதும், எழுதுவதும் மிகவும் மடத்தனமென்றும், வன்னியரில் இன்றும் கூட, பல பேர் நல்ல அந்தஸ்த்தில் இருக்கிறார்கள் என்றும், உதாரணம் வேண்டுமென்றால் அவ்வகுப்பைச் சார்ந்த திருமலை பிள்ளை சென்னை கார்ப்பரேஷனில் மேயராக இருந்திருக்கிறார் என்றும், எனவே பிரதிவாதிகள் வன்னிய ஜாதியினரை வேண்டுமென்றே கேவலமாக எழுதி இருக்கின்றனர் என்றும், எனவே பிரதிவாதிகளான ‘நாடார் குல மித்திரன்’ நிர்வாகிகளுக்கு ரூ. 201 அபராதம் விதிக்கிறேன் என்று தீர்ப்பு அளித்தனர்.

••• •

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu